Monday, September 28, 2015

ஒரு தலை உரையாடல்



மெல்லிய காற்று இதமாய் தழுவி செல்ல!

கடலரசி, மாலை கதிரவனை கட்டி தழுவி, தனக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்து கொள்ள! அங்கே ஒரு கூடல் அழகாய் அரங்கேறி கொண்டிருக்கின்றது!

நாகரீகம் கருதி நிலா மகள் ஓரமாய் எட்டி பார்த்து காத்திருந்தாள், இந்த கூடல் முடியும் தருணத்திற்கு!

இயற்கையை ரசிப்பது என்றும் சலிக்காதது என நினைத்து கொண்டே அருகில் திரும்பி பார்த்தேன்!

இயற்கையின் கூடல் நடுவே உன்னுடன் ஒரு ஊடல்!

சில நேரங்களில் ஊடலுக்கு காரணம் தேவை இல்லை! சிறு நினைப்பும் சிறு பார்வையும் மட்டும் கூட போதும்! ஏன் காரணமே இன்றி வரும் ஊடல்கள் காதலில் அதிகம்!

கடற்கரையில் அருகே தழுவாத கண்ணியமான இடைவெளியில் நீ!

இந்த பாழாய் போன கண்ணியம் கண்களுக்கு இல்லையே!

அங்குலம் மறக்காமல் ரசிக்கும் கண்களை என்னால் கட்டி போட முடியவில்லை!

கடிவாளம் கழட்டி காண்பதற்கு மட்டும் அனுமதி அளித்தேன்!

அருகில் அமர்ந்து மணல் பரப்பில் விரல் கொண்டு கோலம் போடும் குமரி குழந்தையாய் நீ!

காற்றின் மீது லேசாய் பொறாமை, நான் தள்ளி அமர்ந்திருக்க உன்னை இடை விடாமல் தொட்டு செல்லும் காற்றை சபித்தேன்!

மணல் ஒட்டிய விரல்கள் கூட ஆபரணம் பூண்டது போல ஜொலிப்பதாய் உணர்ந்தேன்!

நீ என்ன நினைப்பாய்!

என்னை போல நீயும், உஹும் பாழாய் போன ஆண் மனதுதான்.. ஊடலின் போதும் கூடல் பற்றி நினைத்து தொலையும்!

பெண்கள் மனது?

அது தெரிந்திருந்தால் இந்நேரம் இரண்டு உலக போர்கள் வந்திருக்காது!

உலக போருக்கும் பெண்ணுக்கும் என்னதான் சம்மந்தம்! சத்தியமாக எனக்கும் தெரியாது! பெண் மனது என்று வந்து விட்டாலே இது போன்ற திராபையான உவமைகள் கொடுக்க வேண்டும் என்ற விதி உண்டு!

சரி ஊடல் கூடல் என்று போகும்போது அரசியல் ஆணாதிக்கம் பெண்ணியம்  எதற்கு!

என் கண்கள்! சீ  தொல்லை பண்ணாதே என்று என்னை அதட்டி விட்டு!
மறுபடி தன்  களவாணித்தனத்தை தொடர்ந்தது!

மனது என் கண்ணிடம், இப்படி பார்த்து பார்த்து ஏற்றி விட்டு நீ  தூங்கி விடுகிறாய், ஆனால் தூக்கத்திலும் விழித்திருக்கும் என் பாடுதான் திண்டாட்டம் ஆகிறது என கூறி முடிக்கும் முன்!

அவள் திரும்ப! என் கண்ணும் அவள் கண்ணும் சந்தித்த நொடி! மன மந்தி செயல் அற்று நின்றது! எவ்வளவோ உசுப்பியும் எழுந்திருக்க மறுத்தது!

சில நொடி பார்வை! அவள் அழகிய கண்களுக்குள் துளிர்த்து துருத்தி கொண்டிருந்த அந்த கண்ணீர் துளி!

அடுத்த நொடி மனம் விழித்து கொண்டது, அது ஆண்கள் மனதின் அதி அற்புத சிறப்பம்சம்.  நீயா நானா என்ற உக்கிர போட்டியின் முடிவை அறிவிக்கும் நொடி!

கண் கலங்கி நிற்க! மனது அப்போதுதான் விழித்திருக்க! வாய் மட்டும் அதிகபிரசங்கிதனமாய் அனிச்சையாய் வார்த்தைகளை உதிர்த்தது! தவறு யாருடையது என்று தெரியாவிடினும்!

"தவறு என்னோடதுதான், என்னை மன்னித்து விடு"

கண்கள் அவள் அசைவை நோக்கி நிற்க! மனது அவள் பதிலிற்கு காத்து நிற்க!

அரை நொடி யுகமாய் மாற! அவளும் ஒரு முறை கடலின் கூடலை நிமிர்த்து பார்த்து பிறகு செவ்விதழ் பிரியாமல் ஹ்ம்ம் என்று ஆமோதித்தாய்!
இல்லை இறங்கி வந்தாய்!  நான் முழுமனதாய் மன்னிப்பு கேட்கவில்லை என்று அறிந்தும் கூட!

கடல் கதிரவன் சென்று, நிலா மகளின் சாட்சியாக!
காதல் அங்கே மேலும் அழகானது! ஊடல் பரிணாம மாற்றம் அடைந்தது!

மறுபடி மனது யோசிப்பதற்கு முன்பு(மூளைக்கு பெரியதாய் இங்கு வேலை இல்லை), வலக்கரம் மிக அதிகபிரசங்கித்தனமாய் அவளை வளைத்தது! அவள் முகம் சாய்ந்தது என் தோள்கள் நோக்கி!

அந்த கூர் நாசியின் விசும்பல், இன்னும் என்னை இறுக்கி கொள் என்பதற்கு சமிங்க்ஜை என்று எனக்கு தெரியாதா?

காற்றிற்கு பழிப்பு காட்டிவிட்டு அணைத்துக்கொண்டேன்! காற்று புகா இடைவெளி விட்டு!


மனோஜ்குமார் பாண்டியன்(மனு)

Wednesday, September 23, 2015

காக்கா (கூ)முட்டை



முதன் முறையாக டெல்லி நோக்கி பயணம் அதுவும் ஒரு மாத காலம் டெல்லி நொய்டா என NCR எனப்படும் நேஷனல் காபிடல் ரீஜியன் சுற்றி வாழ்க்கை என்று நினைத்து பார்க்கையில் மனம் சிறிது துணுக்குறவே செய்தது.. இருப்பினும் 23ம் புலிகேசி படத்தில் வருவது போல விரலை ஆட்டி  வாங்கி விட்டோம் என்று எனக்கு நானே தைரியம் சொல்லி கொண்டு கிளம்பி விட்டேன்..

எதற்கு துணுக்கு என்று கேட்டால், முதல் விஷயம் நமக்கு ஹிந்தி அறவே தெரியாது. இரண்டாவது என் சக பணியாளர்கள் நொய்டா என்னும் உத்தரபிரதேசத்தில் இருக்கும் அந்த ஊரை பற்றி பெருமையாய் சொன்ன விதம்தான் முக்கிய காரணம்..  இவர்கள் ஏற்றி விட்ட விதத்தில் எதோ ஒரு பெரிய கொள்ளை கூட்டத்தில் போய் குதிக்க போகின்றோம் என்ற  எண்ணத்தில்தான் விமானம் ஏறினேன்!!



முதல் முறை விமான பயணம்! எல்லா கவலைகளும் உடைந்து ஊருக்கு போறோம் என்ற குதூகலம் மட்டும் ஒட்டி கொண்டது.. எனக்கு தெரிந்த ஹிந்தியில் பேசி ஒரு வழியாக இருப்பிடம் அடைந்தேன். பெரியதாய் எந்த பிரச்சனையும் இல்லை ஆனாலும் இன்றும் நாம் அங்கு மதராசியாய்தான் முக்கால்வாசி நபர்களால் மதிப்பீடு செய்யப்படுகிறோம் என்பது மட்டும் தெரிந்தது.. இங்க வா மச்சி எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்னு சொன்ன வடகிந்திய நண்பர்கள் அங்கு போன பிறகு கண்டுகொள்ளவே இல்லை.. (இது நான் கொஞ்சம் எதிர்பார்த்ததே) பெரிதாக அலட்டி கொள்ளாமல் முடிந்தவரை அருகில் இருக்கும் இடங்களுக்கு மட்டும் அலுவல் நேரம் முடிந்ததும் போய் வந்தேன்!

இடையில் என் டீமில் இருக்கும் ஒருவரிடம் பேசும்போது.. வருவதற்கு பயந்தேன் என சொல்ல அவர் ஏன் என்று கேட்க.. நான் என் நண்பர்களின் அனுபவங்களை கூறினேன்.. அதே பகுதியை சேர்ந்த மற்றொறு பணியாளர் அது சரிதான் இங்கு கொஞ்சம் பாதுகாப்பு குறைவுதான் என ஒத்துக்கொள்ள மற்றொரு நபர் விவாதத்திற்காக என் நண்பர்கள் கூட சென்னையில் நிறைய திருடு போவதாக சொன்னார்கள் என ஆரம்பிக்க அவர் நோக்கம் புரிந்து நான் பேச்சை வளர்க்கவில்லை...


 ஒரு வாரம் இப்படியே செல்கையில் டெல்லியில் தங்கி நொய்டாவில் எனது அலுவலகத்தில் பணி புரியும் ஒருவர் நட்பு கிடைத்தது!  பழகிய அன்றே நீ தனியாய் அலுத்து இருப்பாய் படத்துக்கு போகலாம் என்று கிட்டத்தட்ட இழுத்து போனார் என்னை! TGIP மால் நொய்டாவில் ஒரு முக்கியமான வணிக வளாகம் பெரியதும் கூட நான்கு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கிளம்ப எத்தனிக்கையில்.. நண்பர் உங்கள் மடிக்கணிணி பையை கையோடு எடுத்து கொள்ளுங்கள் என கூற.. நான் காருக்குள்ளதான இருக்கு பரவாயில்லை என்றேன்..அதற்கு அவர் இந்த ஊரில் எங்கேயும் சிறிது அஜாக்கிரதையா இருந்தாலும் திருடிடுவாங்க அப்படின்னு சிரிச்சிட்டே சொல்ல.. அப்படி ஒன்றும் ஊர் மோசமாய் தெரியவில்லையே டிபிக்கல் சௌத் இந்தியன் நார்த் இந்தியன் ஈகோவால் மிகைப்படுத்தபடுகிறது என நினைத்து கொண்டேன்..  சிறிது நாட்கள் பிறகு  அது மிகைப்படுத்தப்பட்டது இல்லை என நான் உணர்ந்த தருணம் வந்தது..




தி நகரில் இருந்து என்னை போலவே அங்கு வந்து தங்கியிருந்த மற்றொரு நண்பர் அறிமுகமானார்.. விடுமுறை நாள் என்பதால் கடைத்தெருவுக்கு சென்று வரலாம் என முடிவேடுத்தோம்.. பாலிக்கா பஜார் என்னும் இடம் டெல்லி இராஜீவ் சௌக் அருகில் இருந்தது.. மெட்ரோவில் சென்றால் நோய்டாவில் இருந்து 30 நிமிடங்களே ஆகும் பேருந்து என்றால் ஒரு மணி நேரம் குறைந்து போக முடியாது.. என்னிடம் மெட்ரோ அட்டை இருந்ததால் அவர் மட்டும் பயணச்சீட்டு எடுக்க இரயில் ஏறினோம்.. நண்பர் ஓரளவு ஹிந்தி பேசுவும்.. நன்றாகவே புரிந்துகொள்ளவும் செய்தார்... வழி நெடுக அவரும் வழக்கம் போல பயமுறுத்தி கொண்டும் உஷார்ப்படுத்தி கொண்டும் வந்தார்.. எனது பின் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து முன் பையில் வைத்து கொண்டேன்..

பஜாரில் அரை குறை இந்தியில் சமாளித்து பொருட்களை வாங்கி கொண்டு திரும்ப இரயில் நிலையம் வந்தோம்.. இவர் பசிக்கிறது என்று காய்கறி காய்ந்த ரொட்டியை வாங்க நின்றார்.. அப்போ ஒரு வாண்டு வந்து இரண்டு பேருக்கும் நடுவில் நுழைய வழிவிட்டு வாங்கி வந்தோம்.. மறுபடி அவர் மட்டும் பயணச்சீட்டு எடுக்க வரிசையில் நிற்க நான் ஓரு நான்கடி தள்ளி சுவற்றில் சாய்ந்து நின்றேன். 

அப்பொழுது அதே வாண்டு அவருக்கு பின்னாடி வந்து வரிசையில் நின்றது.. அதிகம் பத்து வயது இருக்கலாம.. நானெல்லாம் பக்கத்து தெருவுக்கே அந்த வயசுல போனது இல்ல பசங்க மெட்ரோ வரைக்கும் போரங்களேன்னு யோசிக்கும்போது ஏய் ன் னு நண்பர் கத்த சாது போல் நின்ற அவன் கையில் இருந்து இவர் கைப்பேசியும் சில நூறு ரூபாய்களும் கீழே விழ எதோ உள்ளுணர்வில் ஓட முயன்றவனை எக்கி பிடித்து இழுத்து நிறுத்தினேன். என் நண்பர் பயணச்சீட்டு வாங்க குனியும்போது சடாரென பையில் கை விட்டு கைப்பேசியை திருட முயல இவர் சுதாரித்ததால் தப்பியது.. 

மாட்டிக்கொண்ட பயத்தில் அழ ஆரம்பித்தவனை பார்க்க தர்மசங்கடமாய் இருந்தது.. கோவத்தில் இருந்த நண்பர் கை வீசி பளார் என்று அறைந்து விட்டார்..அவனுக்கு சித்தமும் எனக்கு மனமும் கலங்கி விட்டது.. உங்க பொருள் எல்லாம் இருக்கான்னு கேட்டேன்.. இருக்கு என்றார்.. அவன் மீதான பிடியை தளர்த்தி ஜாவோ என்றேன்.. அவன் திருடினான் என்பதை விட ஒரு சிறுவனை அடித்துவிட்டார் என்றே வருத்தமாக இருந்தது.. நண்பர் எதோ ஆத்திரத்தில் அடித்து விட்டேன் எனக்கும் கஷ்டமாதான் இருக்கு என்றார்.. மீண்டும் அந்த சிறுவனின் முகத்தை நினைவு கூர்ந்தேன் எப்படி பார்த்தாலும் சந்தேகப்படவே முடியாத முகம்.. ஆனால் கண் முன்னே பார்த்தாகி விட்டது நம்பிதான் ஆகனும்.. 



அடித்தது ஒருபுறம் வலித்தாலும்.. அதிலிருந்து எவர் அருகில் நின்றாலும் ஒரு எச்சரிக்கை உணர்வும்.... ஒரு சந்தேக உணர்வும் தானாக ஒட்டி கொண்டதை உணர்ந்தேன்... 

என் நண்பர்களின் அனுபவங்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்படவில்லை என தெளிவாக தோன்றியது.. 

இப்பவும் சொல்கிறேன் அது அம்புட்டு மோசமான ஊர் இல்லை.. 
ஆனால் கொஞ்சம் மோசம்தான்....


இது  காக்கா (கூ)முட்டை, தவறு யாருடையதோ!!... எதற்கும் கவனமாய் இருங்கள்

                                                          ~~மனோஜ்குமார் பாண்டியன்

Saturday, February 14, 2015

"காதலர் தின வாழ்த்துக்கள்"



ஒரு அழகான இளவேனிற்காலம்!

பச்சை பசேல் என அடர்ந்த கானகம்!
குயில்கள் கானம் இசைக்க,
ஊனுண்ணிகள் எங்கோ காணாமல் போயிருக்கும் போல!
மான்களும் மந்திகளும் ஆனந்தமாய் கூத்தாடின!

சிறு சிறு கொண்டை வைத்த வண்ண மயில்கள்,
தோகை விரித்து அழகாய் ஆடி எனக்கு வழிகாட்டின,
சிட்டு குருவிகள் தன் வெல்வெட் சிறகை
படபடவென அடித்து என்னை வரவேற்றன!

எங்கும் பசுமை! எல்லாம் இளமை! ரசிக்கும் தனிமை!

ரசித்து கொண்டே வெண்பச்சை பாசி கம்பளம் விரித்த தரைபரப்பில் சுகமாய் நடந்தேன்!
சற்று முன்னர் பெய்த மழை புல் பூண்டு மரம் கலந்து
சுகந்தமாய் ஒரு மணம் எழுப்பி என் நாசியை சுகிக்க செய்தது!

பச்சை விரிப்பில் பாதரசமாய் வழிந்தோடிய ஓடை தண்ணீர்
தாகமே இல்லை எனினும் அருந்த அரிதாய் அழைத்தது!

விலங்காய் நினைத்து நாவினில் அருந்தினேன் தெளிந்த நீரினை
நாத்திகர்களை கூப்பிட்டு அமிர்தம் உண்மைதான்
என தொண்டை கிழிய வாதம் புரிய தோன்றியது!

அமிர்தம் உண்ட வேகத்தில் வேகமாய் எட்டு வைத்தேன்!
அங்கே அழகாய் ஒரு மாளிகை கண்டேன்!

எட்டடுக்கு மாடி இல்லை, தங்கம் இல்லை வைரம் இல்லை!
மரமும் செடியும் புதர்களும் சேர்த்து
இயற்கை அன்னை அழகாய் செய்த மாளிகை அது!


கையில் பழங்களுடன் துடுக்காய் நடந்து வர!
மாளிகையின் மேற்படியில்! ஒய்யாரமாய் ஒரு உருவம்!


இவ்வளவு அழகையும் கானகத்தில் கண்டு சொக்கி போயிருந்தாலும்!
அந்த ஒய்யார உருவத்தை கண்டதும்
மயக்கமே கொள்ள செய்யும் பேரழகி அவள்!

வண்ண பூச்சுகள் இன்றி தெளிவாய் ஒரு முகம்!
ஆபரணங்கள் இன்றி ஜொலிக்கும் அவள் மேனி!
உதிர்ந்த மயில் தோகையை வைத்து செய்த ஆடையில்!
இயற்கை அன்னை கடைந்தெடுத்த வெண்ணெய் முத்தாய் அவள் நின்றாள்!
என் அவள் நின்றாள்!

என் உருவம் தெரிந்தவுடன் உன் விழிகள் காட்டும் பூரிப்பையும்!
என்னை நோக்கி ஓடி வரும் பிஞ்சு பாதத்தையும்!

என்னவென்று நான் சொல்வேன்! அந்த மயில் ஆட்டம் உன்னை விஞ்சவில்லையே!

பிஞ்சு குழந்தை புன்னகை கொண்ட கொஞ்சும் குமரி
உன்னை இமைக்காமல் பார்த்து நின்றேன்!

அருகில் வந்தாய் அழகாய் அளவாய் விரல் கோர்த்தாய்!
பயணம் எப்படி அன்பே உன் செவ்விதழ் திறந்து வார்த்தை உதிர்த்தாய்!
அப்பப்பா குயிலும் தோற்றுதான் போனது உன் தேன் தோய்ந்த குரலிசையில்!
நான் காதலில் விழுந்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை!

இவ்வளவு அழகும் கொண்டு! எனக்கே எனக்கென்று நீ!
 எந்தன் அருகில் நிற்க அமைந்த வாழ்க்கை!

இத்தனையும் மனதில் கொண்டு உன்னை மோக விழியில் பார்த்திடவே!

கண் இமை படபடப்பில் சிட்டுக்குருவியின் வெல்வெட் இறகை வென்று முடித்து! நாணத்தில் நாணலை போல என் தோள்களின் மீதி தலை சாய்ந்தாய்!

காதலுடன் குழப்பமும் வந்தது இந்த காதலனுக்கு!

என் காதலி போல் எந்த கானகமும் ஏன் சிறப்பாய் இல்லை!

                                                "காதலர் தின வாழ்த்துக்கள்"

பின் குறிப்பு: முழுக்க முழுக்க கற்பனையே, நோ கிராஸ் கோச்டீன்ஸ்

காதலுடன் மனோஜ்

Saturday, February 7, 2015

பேய் இருக்கா இல்லையா


நமக்கு பேய் என்றால் சின்ன வயசுல இருந்தே கொலை பயம்ன்னு சொல்லலாம்! பத்தாவது படிக்கும் வரை இருட்டாக இருக்கும் படிக்கட்டில் ராத்திரி 8 மணிக்கு மேல இறங்க சொன்ன அலறி அடித்து ஓடி விடுவேன், போயே தீர வேண்டிய நிலை வரும்போது உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடி விட்டு வருவேன். இன்னும் பின்னோக்கி சென்றால் சிறு வயதில் வீட்டில் என் மாமா அருகில் அமர்ந்து சைல்ட் ப்ளே (Childs Play) படம் பார்த்து விட்டு இரவு 11 மணிக்கு படுக்கும்போது எனக்கு பயமா இருக்கு, தூங்குறதுக்கு முன்னாடி எதாச்சும் காமெடி போடுங்க பாத்துட்டு தூங்குறேன்னு அடம் புடிக்க அப்புறம் என் மாமா சமாதானப்படுத்தி தூங்க வைத்த கூத்தெல்லாம் நடந்துள்ளது. பத்து படித்து முடித்த பிறகுதான் ராஜேஷ் குமார் ,சுபா  நாவல்களை அதிகமாய் படிக்க ஆரம்பித்தேன், பெரிதாய் பேய் கதைகள் இல்லாவிடினும் பயம் கொள்ளும் விதமாக கதைகள் இருக்கும், சில சமயங்கள் நமது பலவீனங்களை பலமாய் மாற்றுவது புது உத்வேகத்தை தரும் அது ஒரு சுகமும் கூட, மெதுவாக இந்திரா சௌந்தர்ராஜன் புத்தங்களையும் எங்கு பேய் கதை கிடைத்தாலும் தேடி படிப்பது, பர்மா பஜார் சென்று ஈவில் டெட் (evil  dead) படம் வாங்கி வந்து இரவு 12 மணிக்கு போட்டு பார்ப்பது என பல விஷப்பரிட்சைகள் மூலம் ஓரளவு என் இருட்டு பயங்களும் பேய் பயங்களும் பெரும் அளவு குறைந்தது. அப்புறம் நைட் ஷிப்ட் வேலைகளும் அதற்கு உதவின சிறிது மாதங்களுக்கு முன்பு வரை நன்றாகவே பொய் கொண்டு இருந்தது. 


சில மாதங்களுக்கு முன்பு Insidious chapter 2 படம் நானும் எனது நண்பனும் நைட் ஷோ பார்த்து விட்டு வரும்போது அவன் வீட்டுக்கு பயந்து பயந்து செல்லும்போதும் நான் தைரியமாகத்தான் வீடு சேர்ந்து தனியே உறங்கியும் போனேன். இது நடந்து ஒரு மூன்று நான்கு நாட்களுக்கு பிறகு வரவேற்பறையில் தனியாக படுத்து grown up  படம் பார்த்து கொண்டே வேலை செய்து கொண்டிருந்தேன், இரவு ஒரு 2:30 மணி இருக்கும் சோர்வாக இருப்பதால் உறங்க செல்லலாம் என தொலைகாட்சியை அனைத்து விட்டு என் படுக்கை அறைக்கு சென்றேன், என் பெற்றோர்கள் உள் அறையில் படுத்து கொள்வார்கள். என் அறை அக்மார்க் கல்யாணம்  ஆகாத பையனின் அறையை போன்று இருக்கும் பொருட்கள் என் மெத்தை மேல் சிதறி கிடக்க நான் தரையில் பாய் விரித்து படுத்து கொள்வேன், தைரியசாலியை மாறியதில் இருந்து விளக்கை  எரிய விட்டால் தூக்கம் சரியாக வராது அதனால் கும்மிருட்டில்தான் பெரும்பாலும் தூக்கம்,



அன்று வழக்கம் போல விளக்கை  அணைத்து விட்டு படுத்த பிறகுதான் கனவுகள் வர ஆரம்பித்தன. இது வரை பார்த்த அனைத்து பேய் படங்களும் கதைகளும் ஓடின அதில் நான் ஒரு   கதாபாத்திரமாய் வேறு வந்து தொலைத்தேன், பேய் கனவுகள் வருவது எனக்கு ஒன்றும் புதிது இல்லை அவ்வப்போது வரும் போகும் பிறகு தூங்கி எழுந்து பார்க்கும்போது சிரித்து கொள்வேன் அவ்வளவே, எதோ ஒரு பேயின் முதுகில் சவாரி செய்தேன் செய்தேன், எதோ ஒரு பேய் என்னை துரத்தியது ரத்தம் சொட்ட சொட்ட ஓடி வந்தது, தலை தெறிக்க ஓடினேன், அப்புறம் ஏதோ ஒரு கட்டி முடிக்காத கட்டிடத்தில் முடியை விரித்து போட்டு ஆங்கில பேய் படங்களில் வரும் ட்ரேட் மார்க் கவுன் அணிந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்று கொண்டிருக்கையில் திடீரென என் வீட்டு காலியான வரவேற்பறை கடந்து மூடிய என் படுக்கை அறைக்குள் நான் அதே உடை அணிந்து அதே நிலையில் தூங்கி கொண்டிருக்கின்றேன். ஒரு காய் நீண்டு என் கழுத்தை சுற்றி வளைக்கின்றது நான் திடிக்கிட்டு விழித்து பார்க்கையில் என்  தலைக்கு மேல ஒரு கருப்பு தலை நான்கு அடி நீள கூந்தல்  என் தலையணை தாண்டி விரிந்து கிடக்கிறது. என்னை அறியாமல் நான் யாருன்னு பயத்தில் கேக்க,, "நான்தான்ன்னன்" அப்படின்னு ஒரு பெண் அசிரீரி குரலில் சொல்லிவிட்டு என் கழுத்தை நெரிக்க ஆரம்பித்து விட்டது.. என் கண்கள் திறந்திருக்க வாய் காப்பாற்றுங்கள் என்று கத்த சத்தமே வரவில்லை கை கால்களை அசைக்க முடியவில்லை துடித்து கொண்டிருக்கையில் தூக்கம் கலைந்து பார்க்கையில் அதே இடத்தில் கழுத்தில் கை வைத்து கொண்டு நான் படுத்திருக்க நாவும் தொண்டையும் வறண்டு போய்.. வந்தது கனவா இல்லை உண்மையாக நடந்ததா என குழம்பி பொய் நேராக சாமி அறை சென்று விபூதி பட்டை அடித்து விட்டு வந்து என் படுக்கை அறையில் அமர்ந்தேன்.. மணி பார்த்தேன் அதிகாலை 4 மணி,  மனதை தேற்ற பாட்டு கேக்கலாமா என்று யோசித்தேன் பிறகுதான் பார்த்த பேய் படங்கள் அனைத்தும் நியாபகம் வந்தது போற பேய நாமலே ஏன் பாட்டு போட்டு வர வைக்கனும் என்று அப்படியே தூங்கலாம் என்று தலையணையில் சாய்ந்தேன், கண் மூடி படுத்தேன் மறுபடியும் யாரோ என் முதுகில் கை வைத்தது போல ஒரு உணர்வு அவ்வளவுதான் சடாரென்று எழுந்து உட்காந்திருந்தேன்.. இவ்வளவு நடந்த பின்னரும் எவனுக்கு தூக்கம் வரும்.. அவ்வளவுதான் அப்படியே மடி கணினியை விரித்து வைத்து அலுவலக பணியை செய்ய துவங்கி அதிலேயே மூழ்கியும் போனேன். 

காலையில் எழுந்த உடனே முதல் வேலையாக எனது அறையை சுத்தம் செய்தேன்.அந்த நிகழ்வில் இருந்து வெளியே வர ஒரு வாரம் ஆனது. 


பின்பு இணையத்தில் செய்த ஆய்வில் அது துயில் வாதம் (sleep paralysis) என்றும் ஒரு வகை புவிஈர்ப்பால் வருவது என்றும் தெரிந்தது, அறிவியலில் ஆயிரம் விளக்கம் குடுத்தாலும்.. அனுபவிக்கையில் மரண பீதி அடையும் நமக்கும்தான் தெரியும்.. 

இப்போவும் நான் தைரியசாலிதான்! ஆனால் பேய் படங்கள் பார்ப்பதற்கு முன் அறையை சுத்தம் செய்ய பழகி கொண்டேன்.... !

பயந்த சாமானியன் மனோஜ் (எ) தைரியசாலி

Friday, February 6, 2015

அழியும் பேருயிர்


சென்ற ஆண்டு வரை யானைகளை பற்றி பெரிதாக தெரிந்து கொண்டதுமில்லை வாய்ப்பும் அமைந்தது இல்லை, சென்ற ஒரு வருடத்தில் மட்டும் சென்னை ட்ரெக்கிங் கிளப் பல விடயங்களை எனக்கு சொல்லி குடுத்தது, ஒவ்வொரு துறையிலும் அறிவாளிகளை சந்தித்து கலந்துரையாடும்போதுதான் கற்றது கை மண் அளவு என்று எனக்கு நானே தனியாய் குட்டி கொள்கின்றேன், முதன் முறையாக CTC உடன் சென்ற ஒரு நிகழ்வில்தான் ஷ்யாம் துரைராஜ் என்னும் நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, சிறந்த புகைப்பட கலைஞர் எங்க எல்லாருக்கும் அவர்தான் குரு, நிறைய காடு மலைகள் நல்ல புகைப்படங்கள் ஏறி எறங்கி எக்கச்சக்கத்திற்கும் அறிவை வளர்ந்து வைத்திருப்பவர், எஸ் யு வி காரில் மூணாரில் இருந்து வந்து கொண்டிருக்கும்போது யானைகளை பற்றி பேச்சு வந்தது, அவர் அனுபவங்களையும் மக்களின் வன விலங்கு அறியாமை பற்றிய அங்கலாய்ப்பையும் எங்களிடம் பகிர்ந்து கொண்டு வந்தார், கோவில்களில் கட்டி வைத்து காசு குடுத்து ஆசீர்வாதம் வாங்கி பழகி விட்டதால் மக்களுக்கு காட்டு யானைக்கும் வளர்ப்பு யானைக்கும் வித்தியாசம் தெரியாமல் போய் விட்டது என்று அவர் அனுபவத்தில்  கண்ட ஒரு விசயத்தை பகிர்ந்தார்.

ஒரு  காட்டை  ஒட்டிய சாலையில் சென்றபொழுது ஒரு பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றுள்ளது, சற்றே உற்று கவனித்தால் சிறிது தூரத்தில் ஒரு பெரிய ஆண் காட்டானை சாலையை கடக்க  முயற்சித்து கொண்டிருந்தது ஒரு கல்யாண கோஷ்டி வாகனம் யானை கடக்கும் இடம் அருகில் நின்று குடும்பத்துடன் யானையை அலைபேசியில் பதிவு செய்து கொண்டு இருந்தார்கள் போல, அந்த யானைக்கு இவர்களை கண்டு பயம் அதனால் சாலையை கடக்காமல் தயங்கியபடியே நின்றுள்ளது, அது தற்காப்புக்காகவோ இல்ல எதோ ஒரு வேகத்தில் அது தாக்க துவங்கினால் அங்கு இருக்கும் கார்களும் வேன்களும் அதற்கு கால்பந்து போல்தான் என்பதை உணராத ஒரு மக்கள் கூட்டம், காட்டில் விலங்கிற்கு அவ்வளவுதான் தெரியும், நமக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லவில்லை அதன் வாழ்வு முறையை பொறுத்தவரை இப்படி இருப்பதுதான் அதன் இயல்பு. நல்ல வேலையாக அந்த வேன் பின்னாடி நின்ற கார் காரர் கொஞ்சம் புத்திசாலிதனமாக யோசித்து அந்த வேனை கடந்து சென்று பிண்டி வந்த வண்டிகளுக்கும்  வழி ஏற்படுத்தி சென்றுள்ளார் அத்துடன் அந்த குடும்பத்தினரையும் எச்சரித்து விட்டு சென்றுள்ளார், பின்பு அனைத்து வண்டிகளும் மெதுவாக நகர்ந்து செல்லும்போது பார்த்தால் அந்த பெரிய யானைக்கு பின்னால் ஒரு யானை கூட்டமே நின்று கொண்டிருக்கிறது.. மிக சாதாரணமாக தெரியும் இந்த சம்பவத்திற்கு பின்பு மயிர் கூச்செறியும் ஒரு அனுபவமும் காட்டு விலங்கை பற்றிய அறியாமையும் ஒரு சேர விளங்கும். பிறகு இன்னும் சில விசயங்களையும் அவர் சொல்லி கொண்டே வந்தார், அதை போல பல மடங்கு அனுபவத்தை எனக்கு இந்த அழியும் பேருயிர் புத்தகம் தந்தது எனலாம்,


எழுத்தாளர் பெரிய கோவகாரரும், பெரியார் பக்தரும் போல.. மரம் நடுபவர் முதல் மல்லாக்க படுப்பவன் வரை என எல்லாரையும் சாடி தள்ளி விட்டார் முதல் ஐந்து பக்கத்தின் முன்பாகவே. நமக்கு பெரியாரின் மேல் பெரிதாய் அபிப்பிராயம் இல்லை இருந்தும் முழுதும் படிக்க துணிந்தேன் என் சகிப்பு தன்மையை எடை போட, ஆனால் உண்மையை கூற வேண்டும் என்றால் அந்த இடத்தில் நிறுத்தியிருந்தால் நான் படித்த முட்டாளாய் போயிருப்பேன்!


முதல் சில பக்கங்களில் தகவல்களை விட ஆதங்கமும் அங்கலாய்ப்பும் மேலிட்டு காணப்பட்டது, உதாரணமாக புத்தகத்தில் இருந்த வரிகள் 


"புகழ்பெற்ற வாரப்பத்திரிக்கை ஒன்று 'வழித்தடங்கள், மனிதருடனான மோதல், விபத்து' ஆகியன குறித்து ஒரு பெரிய கட்டுரை வெளியிடப்பட்டது. அதில் பெரும் சலனத்தை ஏற்படுத்திய இந்நூலின் முதல் பதிப்பு குறித்தோ அதன் ஆசிரியர்கள் குறித்தோ செய்தியாக கூட ஒரு வரி இல்லை. அடுத்து, சென்ற இரண்டாண்டுகளுக்கு முன் மேட்டுபாளையம் - வனக் கல்லூரியில் நடத்தப்பட்ட கோவையை சேர்ந்த ஒரு தன்னார்வ குழுவினரின் யானைகள் பாதுகாப்பு கருத்தரங்கில் நமது நூல் பற்றி யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை"


சத்தியமாக ஆசிரியர் என் இந்த மாதிரி வரிகளை ஒரு சுற்று சூழல் புத்தகத்தில் சேர்த்தார் என புரிபடவில்லை, நான் பெரிய இவனுமில்லை இலக்கியவாதியும் இல்லை ஆனால் வாசகனாய் இது போன்ற விஷயங்கள் நெருடவே செய்கின்றன, 

சரி நல்ல பகுதிக்கு வந்த பின்பு சிறிதும் தொய்வில்லாமல் தகவல்களை வாரி வழங்குகின்றது இந்த நூல், நிறைய அதி நிறைய விடயங்கள் யானைகளை பற்றி தெரிந்து கொள்ள உதவியது, மத நிலை என்றால் என்ன மனிதனின் மத வெறிக்கும் அதற்கும் வேறுபாடு உண்டு என்பதாகட்டும் அதை பற்றிய நீண்ட விளக்கங்கள், யானையின் பரிணாம வளர்ச்சி,இனப்பெருக்க முறைகள், குட்டிகளின் காலம் என விரிவாக செல்லும் இந்த நூலின் சிறப்பம்சம் தமிழ் இலக்கியங்களின் யானை பற்றிய கூற்றையும் முடிந்த அளவு சிறப்பாகவே பதிவு செய்து வாய் பிளக்க வைக்கின்றார்.

தந்தம் இறைச்சி போன்றவைக்காகவும், சில பேரின் மூட நம்பிக்கைகளுக்காக யானைகள்  வேட்டையாடப்படுவது அனைவருக்கும் தெரிந்ததே. கென்யா  அதிபர் அராப் மாய் பற்றி இந்நூலின் வாயிலாக அறிந்து கொண்டதில் மகிழ்ச்சியே, கள்ள சந்தையில் விற்கப்படுவதை தடுக்கவும் உலகத்திற்கு ஒரு செய்தியை அனுப்பவும் சுமார் 12 டன் கொண்ட யானை தந்தங்களை தீயிலிட்டு கொளுத்தினார்







யானைகளின் அட்டகாசம் கும்மாளம் விவசாயிகள் கஷ்டம் என்ற செய்திகளை எல்லாம் அறவே வெறுக்க செய்தது இந்த நூல், காட்டை சுருக்கி நாட்டை பெருக்கி அந்த பெரும் உயிரை சிறு கூட்டுக்குள் அடைத்து அதன் மீதே பழி போடும் ரெண்டு கால் மிருகங்களான மனிதராதால்தான் இவ்வளவு இடையூறும் என்று நினைத்தால் வருத்தமாய்தான் உள்ளது, இதை ஒற்று கொள்ள மறுப்பவர்கள் ஒரு எண்பது நபர்களை எட்டுக்கு  பத்து அறையில் அடைத்து ஒரு பத்து நாட்கள் வாழவிட்டால் அந்த யானையின் கஷ்டம் தெரியும் என்றே நினைக்கின்றேன்.

அதிர்ச்சி தரும் விதமாக இந்த புத்தகத்தில் அதிகம் இயற்கையை பேணும் கேரளாவில்தான் யானைகள் அதிகம் கொல்லப்படுவதாக கூறுகின்றது, இதை உறுதி செய்து கொள்ள ஆவணங்களை தேடி கொண்டிருக்கிறேன். சமீப காலமாக இந்தியாவின் யானையின் எண்ணிக்கை சீராக உயர்ந்துள்ளதாக ஒரு புள்ளிவிவரமும் புத்தகத்தில் உள்ளது சிறிது ஆதரவு தரும் வகையில் உள்ளது. ஆனாலும் கேரளாவில் 4 பெண் யானைக்கு 1 ஆண் யானை மட்டும் இருக்கும் விகிதம் கவலையே தரும்.



இப்பொழுது சீமை கருவேல மரம் என்ற புதிய காரணியும் சேர்ந்து கொண்டது யானைகளை அழிக்க,  இப்படியே போனால் மிருககாட்சி சாலையில் வைக்க கூட வனவிலங்குகள் பிழைத்திருக்க போவதுமில்லை! செத்த காலேஜில்தான் பாடம் செய்த விலங்குகளை படிக்க போகின்றோம்!



சாமனியன் மனோஜ் 

Tuesday, January 27, 2015

ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லி சிறுத்தை

ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லி சிறுத்தை 


சில புத்தகங்கள் படிக்கும்போதுதான், எப்படா நேரம் கிடைக்கும் அந்த மீதி புத்தகத்தை படிக்கலாம் என்ற ஆர்வம் இருக்கும், இது அவ்வகையில் சேர்ந்தது ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லி சிறுத்தை - The Man-Eating Leopard of Rudraprayag; by Jim Corbett என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கம், ஒரு வேட்டைக்காரன் சிறந்த எழுத்தாளனை இருப்பதை பார்க்கும்போது வியப்பாகத்தான் இருந்தது. அல்லது தஞ்சாவூர்க்கவிராயர் மொழி பெயர்ப்பின் இயல்பா என புரியவில்லை, ஒரு ஆட்கொல்லி சிறுத்தையை பற்றியும் அதை வேட்டையாடி மக்களை காப்பாற்றிய விதத்தையும் ஹீரோயிசம் இல்லாமல் விறுவிறுப்பாய் சொல்லியது வாசகனாய் என்னை கட்டி போட்டு கையில் எடுத்த இரண்டே நாளில் புத்தகத்தை படித்து முடிக்கவும் தூண்டியது, சிறுத்தையின் ஆபத்தை விவரித்ததோடு நில்லாமல் இயற்கை விதிகளையும் ஆங்காங்கே விவரித்து வந்ததும் சிறப்பியல்பே!

நூலில் இருந்து,

அந்த விலங்கு செய்த ஒரே குற்றம் - அதுவும் இயற்கைச்சட்டத்துக்கு  எதிரானது அல்ல.
ஆனால் மனிதனின் சட்டங்களுக்கு எதிரானது - அது  மனித ரத்தம் சிந்த காரணமாக இருந்தது என்பதுதான்.
மனிதனை  பயமுறுத்தும் நோக்கமெல்லாம் அதற்கு இல்லை, தான் பிழைத்திருக்க 
வேண்டும் என்று இதை செய்தது..

இதற்கு மேலும் யாரும் இயற்கை வாழ்வின் முறையை தெளிவாக சொல்ல முடியும் என்று எனக்கு தோன்றவில்லை!

காட்டின் இடையே வசித்து உணர்ந்த அனுபவத்தை இந்த வாசிப்பு கொடுத்து விட்டது எனக்கு!

எத்தனை discovery சேனல் வந்தாலும் இது போன்ற புத்தக அனுபவம் கொடுக்குமா என தெரியவில்லை! Jim Corbett ன் மீதி புத்தகங்களை தேடி படிக்க முடிவெடுத்துள்ளேன்!


சாமனியன் மனோஜ்